அம்பாளின் இருப்பிடம் முதல் பகுதி)பகுதி -1
அம்பாளின் இருப்பிடம் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி -1
பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை.
ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.
முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிற போது,
அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம்.
மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள்.
பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காரும் இடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல்,
பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது.
அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது.
அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.
தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லி இருக்கிறது.
‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள்.
அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம்.
இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்
தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை.
சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன்.
அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது.
தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.
#ஓம்குருபாயோநமஹ#

Comments
Post a Comment