மாத்ருகா புஷ்பமாலா
பகவத்பாதாள் மாத்ருகா புஷ்பமாலா
என்ற ஒரு ஸ்தோத்திரத்தை அருளினார்
இந்த ஸ்தோத்திரத்தில், ஒவ்வொரு பாடலின் முதல் வரியின் முதல் எழுத்தும்
காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான
“க ஏ ஈ ல ஹ்ரீம்;
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்;
ஸ க ல ஹ்ரீம்”
என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது.
இந்த ஸ்தோத்திரம்,
இறைவியை மானஸ பூஜை முறையில் ஆராதிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதை இங்கு பதிவிடும் பொழுது
ஸ்ரீ ஆதி சங்கரரின் தொலைநோக்கு நன்கு புலனாகிறது.
‘ஸ்ரீ வித்யா’ எனப்படும்
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம்,
முத்திரை,
அனுஷ்டானம்
போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது.
இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே,
இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும்.
உதாரணத்திற்கு,
அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே,
ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும்.
த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும்,
பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே
பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும்.
பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி சித்தியானால் மட்டுமே
அம்பிகையின் ‘சம்புடீக்ருத’ நவாக்ஷரி கிட்டும்.
இவற்றின் பின்னரே குருவானவர் பஞ்சதஸியை உபதேசிப்பதை ஆலோசிப்பர்.
ஸாதகர் நன்கு தேர்ச்சி பெற்றார் என குருவானவர் பல பரீக்ஷைகள் மூலம் அறிந்துகொண்ட பின்னரே,
அம்பிகையின் ஷோடஸாக்ஷரி உபதேஸம் நடக்கும்.
இதில் விஷேஷம் என்னவெனில், அம்பிகையின்
ஷோடஸாக்ஷரி சித்தியாயின்,
அந்த ஸாதகர் ஒருவிதத்தில் அம்பிகையின் மறு உருவே ஆகியிருப்பர்.
வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஸாதகர் கிடைப்பதரிது என்று,
தீர்கதரிஸி ஆதி சங்கரர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும்.
இல்லையெனில்,
51 அக்ஷரங்கள் கோர்த்து அமைக்கவேண்டிய
அக்ஷர புஷ்பமாலாவை,
(அம்பிகையின் கழுத்தை அலங்கரிக்கும் முத்துமாலை
51 முத்துக்களால் அக்ஷரங்களாலேயே ஆனது)
வெரும் 17 பத்திகளில் அடைத்து,
அத்துடன்
பஞ்சதஸியையும்,
ஷோடஸியையும்
அதில் மறைத்து அந்த ஸ்தோத்திரத்தை,
ஸ்தவமாக அதாவது அம்பிகையின் மானஸீக பூஜையாக அமைத்தது அம்பிகையின் பேரருளால் அன்றோ!
அம்பிகைக்கு உகந்த
64 உபசாரங்களையும்
இந்த ஸ்தவத்தினூடே இணைத்து ஒரு பரிபூரண மானஸ பூஜா முறையையன்றோ ஆதிசங்கரர் இந்த ஸ்தவத்தில் அமைத்துக் கொடுத்துள்ளார்,
அதன் சக்தியை அவர் இப்படி உரைக்கிறார்.
“எவரொருவர் இந்த ஸ்தவத்தை நித்யமும் முவ்வேளை பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் பாராயணம் செய்கிறார்களோ
அவர்கள் சிந்தையில் அம்பிகையும்,
நாவில் ஸ்வாதத்தின் சாரமான சரஸ்வதியும்,
இல்லத்தில் ஸ்ரீ எனும் பதத்திற்கே உரியவளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நடனமாடுவார்”
என்று கீலகமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.
சிந்தையில் சிவமும்,
முகத்தில் ப்ரம்ம தேஜஸும்,
வாக் சித்தியும்,
இல்லத்தில் அளவிடதற்கரிய செல்வமும்,வந்து சேரும்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.

Comments
Post a Comment