#அபிராமிஅந்தாதிபாடல் -47#
#அபிராமிஅந்தாதிபாடல் -47#
வாழும் படி
ஒன்று கண்டு கொண்டேன்
மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று
விள்ளும் படி அன்று
வேலை நிலம்
ஏழும் பருவரை
எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு
நடுவே கிடந்து சுடர்கின்றதே
பொருள்:-
இரவு பகல் சூழும் சுடர்கள் -
சந்திர, சூரியர்கள்.
உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி.
வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் -
அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள்.
ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள்.
அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி.
வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே -
என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்
ஒருவர் வீழும் படி அன்று -
அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை
விள்ளும் படி அன்று -
அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை
வேலை நிலம் ஏழும் -
கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்
பருவரை எட்டும் -
எட்டு உயர்ந்த மலைகளும்
எட்டாமல் -
எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)
இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே -
இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.
***
நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார்.
கண்டவர் விண்டிலர்;
விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும்
அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும்
சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது.
***
அருஞ்சொற்பொருள்:
விள்ளுதல் -
பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல்
வேலை - கடல்
பரு வரை - பெரிய (பருத்த) மலை
அந்தாதித் தொடை:
சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது.
இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும்.

Comments
Post a Comment