பெரியவாளைப்பற்றி, #கவிஞர் #கண்ணதாஸனின்#
#பெரியவாளைப்பற்றி, #கவிஞர் #கண்ணதாஸனின்#
மற்றொரு அழகான காவியம்….
“மனிதாபிமானத்திலிருந்து மத அபிமானம் வரை;
விஞ்ஞானத்திலிருந்து
மெய்ஞானம் வரை;
மனித மனோ பாவத்திலிருந்து தெய்வகுணங்கள் வரை
காஞ்சிப் பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை.
அவர் விளக்கிச் சொன்னது போல் வேறு எந்த ஞானியும், மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை.
அவரது
தனிமை,
கல்வி,
அறிவு,
நுண்மான் நுழைபுலம்,
தீர்க்கதரிசனம்,
ஒரு தெளிவான பொருளில் கூட, ‘தனது அபிப்ராயம்’ என்ற பணிவான முத்திரை,
இவையெல்லாம் வேறு எவரிடமும் காண முடியாத அம்சங்களாகும்.
பல இடங்களில், அனுபவப்பட்ட சம்சாரிகள் கூடக் காண முடியாத கருத்துக்களை,
அப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார்.
ஜாதியைக் கடந்த ஒரு நியதியை சமமாக போதிக்கிறார்.
அவரது எழுத்துக்களை “கல்கி”யில் படித்தபோது,
அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.
அந்த வேலையை வேறு நண்பர்கள் மிக அழகாகச் செய்து வருகிறார்கள்.
இந்து சமயமும், இந்திய நாடும் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றன.
ஒரு மாபெரும் மேதையின் கருத்துகள் வீணாகிவிடாமல்,
குறைந்த பட்சம் தமிழறிந்தோர் அனைவரின் மத்தியிலும் வைக்கப்பட வேண்டும்.
ஓராண்டுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.
காஞ்சிபுரத்தில்
“சங்கர பக்த ஜன சபை” ஆண்டு தோறும் ஒரு மலர் வெளியிடுகிறது.
அந்த மலரில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான்,
பெரியவரின் தேனம்பாக்கம் தனிமைக் குடிலும்,
அங்கிருக்கும் பசுவும், சிறு நிலமும் பாதுகாக்கப் படுகின்றன.
போன வருடம் அந்த மலரை வெளியிட என்னை அழைத்தார்கள்.
ஜஸ்டிஸ் பாலசுப்ரமணியமும் அழைக்கப் பட்டிருந்தார்.
அவர் விழா துவங்கும் முன்பே தேனம்பாக்கம் சென்று பெரியவரைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்.
நான் பெரியவரைப் பார்க்கச் சென்றபோது இரவு ஒன்பது நாற்பத்தைந்து!
கொட்டகைக்குள் துயில் கொள்ளத் தொடங்கிய பெரியவர்,
என் பெயரை சொன்னதும் எழுகின்ற அரவம் கேட்டது.
அரிக்கேன் விளக்கு மெதுவாகத் தூண்டப்படுவதும் தெரிந்தது.
பெரியவர் வெளியே வந்து, வாசல்படியிலேயே ஒரு பழம்பாயை போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.
சுமார் ஒருமணி நேரம் என்னோடு பேசினார்.
இந்த நாட்டின் பிரதம மந்திரிக்குக் கூட கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அதன்பின், இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால்,
“ஒருமுறை காஞ்சிபுரம் போய் வரலாமா?” என்று தோன்றுகிறது.
நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். யாருக்குமே இவ்வளவு தீக்ஷண்யமான கண்கள் இல்லை.
எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி,
துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரை,
தமிழ்ச் சாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.
துரத்ருஷ்டவசமாக அவர் பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பிராம்மணர்கள் செய்த தவறா?
நாம் செய்த தவறா?
இந்தத் தவறிலே இருவருக்கும் பங்கிருக்கிறது.
பிற சாதியினர் விரும்ப முடியாதபடி பிராமணர்கள் நடந்து கொண்டார்கள் என்பது உண்மை;
அதுபோலவே,
நமக்குச் சம்பந்தமில்லாதவர் போல நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.
இந்த நிலையை இருவருமே மாற்றியாக வேண்டும்.
உலகமே அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை,
ஒரு சாதியினர் தங்களுக்குள் அடக்கிக் கொள்ளுவதன் மூலம்,
பக்தி மார்க்கத்துக்கு மட்டுமின்றி,
தத்துவ மார்க்கத்துக்கும், உலகத்துக்குமே அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்.
அவரைக் கண்டு கொள்ளாதிருப்பதன் மூலம்,
பிற சாதியினர்,
ஞானம் எனும் பெரும் பொருளையே இழந்து விடுகிறார்கள்.
சாதி துவேஷத்தை மாற்றக் கூடியதும்,
நீக்கக் கூடியதும் பக்தி மார்க்கம் ஓன்றே!
“நாத்திகம்.. அதை வளர்க்குமேயல்லாது, நீக்காது!”
என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.
ஆத்திகம் தழைத்தோங்கி வரும் காலம் இது!
தமிழக மக்கள்
அனைவருமே அய்யப்பனாகவும், பழனியப்பனாகவும் அவதாரம் எடுக்கும் காலம் இது!
அற்புதமான எதிர்காலத்தை நோக்கித் தமிழகம் நடை போடுகிறது.
இந்த நேரத்தில்
“பூணூல் அணிந்தவனா, இல்லாதவனா?”
என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு,
காஞ்சிப் பெரியவரின் பெயரால், எல்லோரும் ஒன்றுபடுவதே எல்லோரின் நல்வாழ்வுக்கும் வழி”……
அன்பன்,
கண்ணதாஸன்

Comments
Post a Comment