அம்பாளின் ஸ்வரூபம் :
தெய்வத்தின்குரல்
பாகம் -1
அம்பாளின் ஸ்வரூபம் :
“நீ தான் பரமேசுவரன் சரீரம்”
என்று
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்.
சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது.
பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன.
இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது.
அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால்,
அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி.
இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும்,
அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது.
பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி.
இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள்தான்.
உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.
உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது.
அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால்,
அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள்.
கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.
அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக,
இவள் பாதி – அவர் பாதியாக
ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம்.
சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும்
பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள்
வாக் அர்த்தாவிவ –
என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார்.
நான் ‘பசு’ என்று சொன்னால்
அது ‘ப’ என்கிற ஒரு சப்தமும்
‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான்.
சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது?
எப்படியிருக்கிறது,
என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது,
எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது.
வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன.
இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் ‘சொல்’ என்றால் ‘பொருளாக’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.
தொடரும்

Comments
Post a Comment