அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
தெய்வத்தின் குரல் பாகம்-4.
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
சாதாரணமாக,
பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது?
அன்னதானம் செய்து,
பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.
ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும்,
மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான்.
அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள்.
அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.
இத்தனை
ஸெளந்தர்யம்,
லாவண்யம்
அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.
காருண்யம்தான் லாவண்யம்.
பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால்,
துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ,
அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
ராஜராஜேசுவரி,
புவனேசுவரி,
துர்க்கை,
காளி என்று இப்படி
ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால்,
அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.

Comments
Post a Comment