உடல் உயிர் ஆன்மா பகுதி -3
உடல் உயிர் ஆன்மா பகுதி -3
இப்போது
உடல் என்றால் என்ன?. உயிர் என்றால் என்ன?.
இந்த உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ள சம்பந்தம்
(தொடர்பு) என்ன என்று ஓரளவு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
அடுத்தாக இந்த #ஆன்மா என்றால் என்ன அது எப்போது இந்த உயிருடலுடன் இணைந்து கொள்கிறது என்பதுபற்றி ஆராயலாம்.
#ஆன்மா எப்படி பிறப்பெடுக்கிறது என்று ஆராயும்போது.
சிவம் என்ற நிலையான சக்தி
இவ்வுலக சஞ்சாரம் அதாவது இவ்வுலக தொழில்பாட்டை நிலைநாட்டுவதற்காக
#சக்தி என்னும் அசையும்
சக்தியுடன் இணையும்போது ஆன்மா உருவாகிறது.
இதுவே இந்து மதத்தில் சிவன் பார்வதியில் இருந்து ஆன்மா தோன்றுவதாகவும்,
இவ்வாறு வேறு வேறு மதங்களில் வேறு வேறு பெயர்களில் சித்தரிக்கப் பட்டிருந்தாலும்
எல்லா மதங்களும் #ஆன்மா ஒரு மூலத்தில் இருந்து உருவாகிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு உயிரினத்துக்கு (உடலுக்கு) பரிணாம வளர்ச்சி
இருப்பது போல
ஒரு ஆன்மாவுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு.
சிவனில் இருந்து உருவாகும் ஆன்மாவானது பல படிமுறைகளை பல உடல்களைக் கடந்தே இந்த
மனித உடலை அடைகிறது எனக் கூறுகின்றன வேதங்கள்.
ஆன்மாவைப் பற்றி
(பரிணாம வளர்ச்சி)
மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்க் குறிப்பிடும்போது
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”
என்று குறிப்பிடுகிறார். இவ்வரிகளின் கருத்தினை ஆராயும்போது
புல் ஆகி – புல்லாகியும்,
பூடு ஆய் – பூண்டாகியும் (சிறு தாவரங்கள்), ப
புழு ஆய் – புழுவாகியும் (புழுவகை / மீன்கள்),
மரம் ஆகி – மரமாகியும்,
பல்விருகமாகி – மிருகங்களாகியும்,
பறவை ஆய் – பறவையாகியும்,
பாம்பு ஆகி – பாம்பாகியும்,
கல் ஆய் – கல்லாகியும்,
இங்கு கல்லாய் என்று குறிப்பிடும்போது
அது கல் (கருங்கல்)
அல்லது பாறையைக்
குறிக்கிறது.
கல்லில் சக்தியுண்டு.
இரு கற்களை உரசும்போது நெருப்பு உண்டாகும்.
கல் பஞ்ச பூதங்களால் ஆனது.
இயற்கையாக இருக்கும் கல் வளரும். அதிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட கல் வளராது.
அது மட்டுமல்ல கல்லிலும்
ஆண் பெண் என்று சில குணாதிசயங்களை வைத்துப் வகைப்படுத்துவார்கள் ஆச்சாரியார்கள்.
மனிதர் ஆய் – மனிதராகியும்,
பேய் ஆய் – பேயாகியும்,
கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும்,
வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும்,
முனிவர் ஆய் – முனிவராகியும்,
தேவர் ஆய் – தேவராகியும், செல்லாநின்ற – இந்த,
தாவர சங்கமத்துள் – கிளைவிட்டு தாவரம் வளர்வதுபோல பல உடல்கள் பல பிறவிகள் எடுத்து எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து,
இளைத்தேன் – யான் சோர்வுற்றேன்,
எம்பெருமான் – எம்பெருமானே,
இன்று – இப்பொழுது,
மெய்யே – உண்மையாகவே,
உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு,
வீடு உற்றேன் – பிறவிப்பிணி தீர்த்து முத்தியடைந்தேன்.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்ன வென்றால்
ஆன்மாவானது உலகிலுள்ள மரம், செடி கொடி, உட்பட இவ்வுலகிலுள்ள அத்தனை உயிரினங்களிலும் வாசம் செய்யும்.
அதாவது ஒரு உயிரினம் இவ்வுலகுடன் இணைந்து கொள்ள ஒரு உடல் இப்புவியில் வாழ ஆன்மா தேவைப்படுகிறது.
ஆன்மா, வசிக்கும் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு அவ்வுடலின் நடவடிக்கைகள் அமையும்.
அதாவது மூலத்தில் இருந்து உதிக்கும் ஒரு ஆன்மாவின் ஆரம்ப நிலையாக
புல், பூண்டு, தாவரங்களில் தனது இவ்வுலக சஞ்சாரத்தினை ஆரம்பிக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம்.
உயிரினங்கள், அவ்வுயிரினங்கள் பெற்றுள்ள பொறிகளைக் (புலன்கள்) கொண்டு
ஐந்து வகையாக
((ஓரறிவு உயிரினம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை) வகைப்படுத்தப் பட்டுள்ளன.
அதில் மனித இனம் ஒரு படி மேலாக ஆறறிவு கொண்டவர்களாக வேறுபடுத்தப் பட்டுள்ளார்கள்.
ஐம்புலன்கள் (ஐம்பொறிகள்) மெய், வாய், கண், மூக்கு, செவி.
இப்போது ஒவ்வொரு புலனுக்கும் (அறிவுக்கும்)
உரிய சில உதாரங்களைப் பார்ப்போம்.
ஓரறிவு (ஒரு புலன் – உடல் (மெய்). தொடு உணர்ச்சி (தொடு உணர்வு) மட்டும் உள்ள உயிரினங்கள் ஓரறிவு உயிரினங்கள் ஆகும்.
உதாரணம் – புல், செடி, கொடி, மரம்.
ஈரறிவு (இரு புலன்கள் – மெய், வாய்) தொடு உணர்வு, சுவை உணர்வு –ஆகிய இரு புலன்கள் மட்டும் கொண்ட உயிரினங்கள் ஈரறிவு உயிரினங்கள் எனப்படும்.
உதாரணம் நத்தை, சங்கு.
மூன்றறிவு (மூன்று புலன்கள் – மெய், வாய், மூக்கு) – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு (மோப்ப உணர்ச்சி) கொண்ட உயிரினங்கள் மூவறிவு உயிரினங்கள் ஆகும்.
உதாரணம் கரையான், அட்டை, எறும்பு.
நான்கறிவு (நான்கு புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண்) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு கொண்ட உயிரினங்கள் நான்கறிவு உயிரினங்கள் ஆகும்.
உதாரணம் – நண்டு, தும்பி, கொசு, சிலந்தி, வண்டுகள், தேள்
ஐந்தறிவு (ஐந்து புலன்கள் – மெய், வாய், மூக்கு, கண், செவி) தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு ஆகிய எல்லா ஐந்து உணர்வு களையும் பெற்றுள்ள உயிரினங்கள் ஐந்தறிவு உயிரினங்கள் ஆகும்.
மனிதர்கள், பறவைகள், பாலூட்டிகள் யாவும் ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் ஆகும்
ஆறறிவு – மனிதன் – ஐந்தறிவு கொண்ட உயிரினத்தில் இருந்து ஏதோ ஒன்று இவனுக்கு சிறப்பாக இருக்கின்றது.

Comments
Post a Comment