#ஆறாம் அறிவு என்பது பகுதி-7
#ஆறாம் அறிவு என்பது பகுதி-7
.
அதாவது அந்த அறிவிற்கான ஆற்றல் குண்டலினி சக்தியின் மூலமாகக் கிடைக்கிறது.
இந்த “குண்டலினி” என்ற சக்திரூபமான குண்டலினி சக்தி மனிதர்களால் மட்டுமே அறிந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
அந்த “குண்டலினி” மூலமாக பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்று நாம் ஆராயும்போது, ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும்.
அதாவது இறைவனை உணர உதவும் கருவியே குண்டலினி ஆகும். குண்டலினி என்பது இறைவனை உணரும் கருவி மட்டுமல்ல யோகத்தின் மூலமாக இறைவனை உணர்ந்து, அறிந்து,
நாம் முற்பிறவிகளில் செய்த பாவமெல்லாம் களைந்து, பிறவிப்பிணி போக்கி அந்த ஜோதியுடன்
(ஆதியுடன், மூலத்துடன், சிவனுடன்) கலக்கவும் (ஐக்கியமாகவும் முத்தியடையவும்) மனிதருக்கு அமைந்த ஆறாவது அறிவாகும்.
அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான “குண்டலினி” சக்தியினால் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக்கொள்ள முடியும்.
இறைவனை அறிந்துகொள்ளும் மனிதர்களே ஆறறிவு பெற்ற மனிதர்கள் ஆவார்கள் என்பது சித்தர்களின் உபதேசமாகும்.
தாம் கொண்டுள்ள ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவதில்லை என்றே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதாவது மனிதர்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய குண்டலினி இருக்கின்றது.
இருந்தும் எல்லா மனிதர்களது ஆன்மாக்களும் குண்டலினி அறிவுமூலமாக இறைவனை அறிந்து கொள்ள முயற்சிக்காமல், சாதாரணமான விலங்குகள் போல ஐம்புலன்களின் வழியே உலக இன்பத்தில் செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.
அதனால் இறைவனை அறிந்து கொள்ள இயலாத மனிதர்களை ஐந்தறிவு படைத்த விலங்குகளுடனேயே ஒப்பிடவேண்டும் என் குறிப்பிடுகிறார்
தொல்காப்பியர்.
தமது ஆறாவது அறிவின் மூலமாக இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களே மனிதர்கள் என் அழைக்கப் படுவார்கள் என்பது தொல்காப்பியரின் கூற்று.
அதாவது இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் (உயிரினமும்) புல் பூண்டில் இருந்து ஆரம்பித்து தாம் தாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு பல பிறவிகள் எடுத்து இறுதியில் மனிதப்பிறவி எடுத்து தனது ஆறாம் அறிவின் மூலமாக இறைவனை அறிந்து தனது பிறவிப்பிணி தீர்த்து முத்தியடையும் என்பது ஆன்மீகக் கருத்தாகும்.
இவ்விடத்தில் மனிதனுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடாக மனிதனது உடலமைப்பையும் முள்ளந்
தண்டையும் கருத்திற் கொள்ளவேண்டும் விலங்குகளுக்கு அவற்றின் உடலும் முள்ளந்தண்டும் தரைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ளது. மனிதனின் முள்ளந்தண்டு நேராக மேல்நோக்கி அமைந்துள்ளது.
மனித உடலில் முள்ளந்தண்டு வழியாக கீழ்நோக்கிப் பார்ந்தால் இடுப்புப் பகுதிக்கு கீழாக ஒரு குழி விழுந்திருப்பதனை அவதானிக்க முடியும். இதுவும் மனிதனுக்கு குண்டலினி என்ற சக்தி அமைந்துள்ளதற்கான அடையாளமாகும்.
குண்டலினியானது மனித முள்ளந்தண்டின் அடிப்பாகத்தில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இரு தொடைகளுக்கு நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நெருப்புக்கோளம் போன்ற ஒரு சக்தியாகும்.
சிவன் சக்தியில் இருந்து தோன்றிய ஆன்மாவானது எப்படிப்பட்ட தூய்மை நிறைந்த அப்பழுக்கற்ற ஆன்மாவாக இருந்ததோ அது எப்போதும் எப்பிறப்பு எடுக்கும்போதும் அப்படியே தூய்மையாகவே இருக்கிறது.
ஆனால் ஆன்மாவானது ஒவ்வொரு உடலினுள் வசிக்கும்போதும் அவ்வுயிரினத்தின் பொறிகளுக்கு (புலன்களுக்கு) ஏற்றவாறு அது செயற்படும்போது அதாவது அவ்வான்மா அவ்வுடலில் இருந்து அவற்றின்புலன்களுக்கு ஏற்றவாறு செய்யும் நன்மை தீமைக்கு ஏற்றவாறு பாவ புண்ணியம் என்ற காரியங்கள் அவ்வான்மாவுடன் இணைந்து கொள்கிறது.
ஆன்மாவுடன் அப்பாவ புண்ணியங்களும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு எடுத்துச் சென்று அனுபவிக்கப்படுகிறது.
ஆன்மாவின் ஒரு அங்கமே அதாவது ஒரு பகுதியே மனமாகும். அதாவது மனித உடலை உடலை (கண்ணுக்குத் தெரியும் உடலை) தூல உடல் அல்லது சூல உடல் எனவும்,
ஆன்மாவை சூக்கும உடல் எனவும் அழைப்பர் ஞானிகள். சூல உடலில் எப்படி அங்கங்கள் பொறிகள் இயங்குகின்றனவோ, அதேபோல சூக்கும உடலிலும் பல பொறிமுறைகள் உண்டு. அதாவது குண்டலினி சக்தி, ஏழு ஆதாரங்கள் உட்பட மனமும் ஒரு பொறிமுறையாகச் செயற்படுகிறது.
இந்த மனமே ஐம்புலன்களை கையாள்கிறது. மனமானது மூளையைப் பயன்படுத்தி புத்தி (அறிவு) என்ற செய்கையின் மூலமாக உடலைக் கட்டுப் படுத்துகிறது.
உயிர் உடலுக்குள் இருந்து உடலை இயக்குகிறது. ஆன்மா உடலுடன் இணைந்தவாறு இருந்து கொண்டு மனதின் வழியாக உடலை இயக்குகிறது.
ஒரு மனிதனது (ஒரு உயிரினத்தின்) அந்தப் பிறவியில் அனுபவிக்கும் ஏக்கங்கள், ஏமாற்றங்கள், நிறைவேறாத ஆசைகள், முடிவுறாத திட்டங்கள், அல்லது மகிழ்ச்சி உணர்வுகள் அல்லது குற்ற உணர்வு அவன் செய்யும் நன்மை, தீமை, பாவ புண்ணியங்கள் போன்றவை உடல் இறக்கும்போது உடலோடு மண்ணாகியோ, எரியூட்டப்பட்டோ மறைவதில்லை. அவை ஆன்மாவுடன் அடுத்த பிறவிக்குப் பயணிக்கின்றன.
இந்த உணர்வுகளைத் தேக்கியபடி ஆன்மாவானது இன்னொரு உடலுக்காகக் காத்திருக்கும். ஒரு புதிய உடல் கிடைத்ததும் அதனுடன் இணைந்து (பிறப்பெடுத்து) தான் தன்னுடன் சேகரித்து வந்த உணர்வுகளை (பாவ புண்ணியங்கள் ) அவ்வுடலில் வாழ்ந்து அனுபவிக்கிறது. அதன் மூலமாக ஏற்படும் நன்மை தீமைகளை அந்த ஆன்மா அனுபவிக்கிறது.
மனம் ஆன்மாவிற்கு கட்டுப்பட்டது. ஆனாலும் அது சிந்திக்கும் தன்மையது.

Comments
Post a Comment