இறைவன் திருவருள்
இதனாலேயே மணிவாசகப் பெருமான் இறைவன் திருவருளை,
“பால் நினந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்று இறைவன் திருவருளை தாயினுக்கு ஒப்பிடுவார்.
“அருளது அரன் தனக்குச் சக்தியாகும்” என்று
சாத்திர நூல்கள் குறிப்பிடும்.
இறைவன் அன்பு என்றால்
அவன் ஆற்றல் அருள்.
இறைவன் சுடர் என்றால்
அவன் அருள் அச்சுடரின் வெம்மை ஆகும்.
எனவே இறைவனின் திருவருள் அல்லது #அம்பாள் என்பது
இறைவனின் ஒரு கூறே
தவிர வேறு ஒருபொருள் அல்ல.
நாம் நினைப்பதுபோல இறைவனும் இறைவியும் வேறு அல்ல!
அவை ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரியாதவை.
எனவேதான்
சிவம் இல்லையேல் சக்தி இல்லை,
சக்தி இல்லையேல் சிவமில்லை
என்ற வழக்கு உண்டாயிற்று.
சிவத்திற்கும் சக்திக்கும் இல்லறத்தில் வருவதுபோல்,
கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் வருவதுபோல் சண்டைகள் வருவதில்லை.
சிவப்பரம்பொருளின் எண்ணப்படி அதன் திருவருள் செயல்களை நிகழ்த்தும். அதனாலேயே,
“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”
என்று சாத்திர நூலான சிவஞானசித்தியார் குறிப்பிடும்.
அம்பாள் எனப்படுபவள் தத்துவமாகவும்,
பாமர மக்கள் விளங்கிக் கொள்ளவுமே
இவ்வாறு
மனைவியாகவும்,
மகளாகவும்,
தாயாகவும் இறைவனுக்குச் சொல்லப்படுகிறாள்
என்பதைத் திருமூலர் பின்வருமாறு அழகாகக் குறிப்பிடுவார்.
“அரனுக்கு மனோன்மனி தாயும்,
அரனுக்கு மனோன்மனி மகளும்,
அரனுக்கு மனோன்மனி
நல்தாரமுமாமே”.
மேலும் தாரமும் ஆகுவாள் தத்துவமாய் நிற்பாள், காரண காரியம் ஆகும் கலப்பினள்”
என்றும் குறிப்பிடுவார்.
எனவே நம்மில் பலர் நினைப்பது போல் அம்பாள் எனப்படுபவள் இறைவனுக்குத் தாயோ, மனைவியோ கிடையாது.
அம்பாளாகப்பட்டவள் சிவப்பரம்பொருளான
இறைவருடன் மேலுலகத்தில் இல்லறமும் நடத்தவில்லை.
– திருச்சிற்றம்பலம் –

Comments
Post a Comment